search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்
    X
    ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்

    மக்கள் மாஸ்க் அணிவதை மாகாண கவர்னர்கள் கட்டாயமாக்க வேண்டும் - ஜோ பிடன்

    அமெரிக்காவில் கொரோனா பரவலை குறைக்க மாகாணங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை கவர்னர்கள் கட்டாயமாக வேண்டும் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்தார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார். அவருடன் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார். 

    கொரோனா வைரஸ், கருப்பின மக்களின் போராட்டம் போன்றவை அமெரிக்க தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பிற்கு 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

    வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான பொதுமக்கள் மாஸ்க் அணியும் நடைமுறை அமெரிக்காவில் கட்டாயமாக்கப்படவில்லை. 

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மக்கள் முகமூடி அணிய வேண்டும் என கூறிவந்தாலும் அதை கட்டாயமாக்கும் உரிமை மாகாண கவர்னர்களிடமே உள்ளதாக தெரிவித்தார். மாகாண கவர்னர்கள் தான் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட்ட வேண்டும் என தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் தங்கள் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்களை சந்தித்து வரும் அவர்கள் வீடியோ கான்பிரஸ் மூலமாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நேற்று வில்மிங்டன் நகரை சேர்ந்த சுகாதாரத்துறை ஆலோசகர்களிடம் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் வீடியோ கான்பிரஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பேசிய பிடன், வீடுகளை விட்டு வெளியே செல்லும் அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். இந்த நடைமுறையை தொடர்ந்து 3 மாதங்கள் கடைபிடிக்கவேண்டும். அனைத்து மாகாண கவர்னர்களும் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். மாஸ்க் அணிவதை முன்கூட்டியே கடைபிடிக்காதது தேவையற்ற மரணங்களுக்கு வழிவகுக்கிறது.

    மாஸ்க் அணிவது வைரஸ் பரவலை குறைக்கும் என சுகாதாரத்துறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். நமது பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம் என நம்புகிறேன். அதிபர் டிரம்ப்பும் அவரது பாடங்களை கற்றுக்கொண்டார் என நம்புகிறேன்’ என்றார். 
    Next Story
    ×