search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புபோனிக் பிளேக் நோய்
    X
    புபோனிக் பிளேக் நோய்

    மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி

    மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    உலான்பாதர்:

    சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் திணறடித்து வருகிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்காக உலக நாடுகள் போராடி வருகின்றன.

    இந்த நிலையில் சீனா மற்றும் அதன் அண்டை நாடான மங்கோலியாவில் பரவி வரும் புபோனிக் பிளேக் நோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    புபோனிக் பிளேக் என்பது பாக்டீரிய நோய். இது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்து தின்னும் உயிரினங்களால் பரவுகிறது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் சீனா மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3-ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1-ந்தேதி மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் 2 பேருக்கு புபோனிக் பிளேக் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் மர்மோட் இறைச்சியை சாப்பிட்டதாக தெரிவித்தனர். எனவே மர்மோட் இறைச்சியை மக்கள் சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த மாதம் 15-ந் தேதி அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கோவி அல்டாய் மாகாணத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் புபோனிக் பிளேக் நோயால் உயிரிழந்தான். இந்த நிலையில் மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். 42 வயதான இவர் புபோனிக் பிளேக் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மங்கோலிய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×