search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தை கண்டித்து மக்கள் போராட்டம்

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து ஸ்பின் போல்டாக் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
    காபூல்:

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது. இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து ஸ்பின் போல்டாக் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகவும், அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டால் ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனிடையே வருங்காலங்களில் இதுபோன்ற மோதல்களை தவிர்ப்பதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×