search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
    X
    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் காஷ்மீர் பிரச்சினையை கிளப்ப முயற்சி - சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

    பாகிஸ்தானுடன் சேர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் காஷ்மீர் பிரச்சினையை கிளப்ப முயன்ற சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    நியூயார்க்:

    காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்கு அதன் நட்பு நாடான சீனாவும் உதவியாக இருக்கிறது. எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் சீனா, எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீர் பிரச்சினையை சீனா ஏற்கனவே பலமுறை கிளப்ப முயன்றுள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினை என்று கூறி சீனாவின் முயற்சியை பாதுகாப்பு சபையில் உள்ள மற்ற நாடுகள் நிராகரித்துவிட்டன.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாளையொட்டி, காஷ்மீர் பிரச்சினை பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தை அதில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா நேற்று முன்தினம் கூட்டி இருந்தது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதை சர்வதேச பிரச்சினை ஆக்கும் நோக்கத்தில் சீனா இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

    இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்றது. அதற்கு சீனா ஆதரவு தெரிவித்தது. ஆனால் பாதுகாப்பு சபையில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா, பாகிஸ்தானின் இந்த கூட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இந்த தகவலை ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதிநிதி கிளப்ப முயன்ற போது மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டியும், இது இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினை என்று கூறியும் விவாதிக்க மறுத்துவிட்டதாக அதில் அவர் கூறி உள்ளார்.

    காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினை ஆகும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்து இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதை உறுதியாக நிராகரிக்கிறோம். காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம் நடத்துவதற்கான முயற்சியை சீனா முன்னெடுத்து உள்ளது.

    இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து இவ்வாறு விவாதம் நடத்த சீனா முயற்சி மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் இது தொடர்பாக அந்த நாடு மேற்கொண்ட முயற்சிகளுக்கு சர்வதேச சமுதாயத்தின் ஆதரவு கிடைக்கவில்லை. இப்போதும் அதுபோல்தான் நடந்து உள்ளது.

    இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா மூக்கை நுழைப்பதை உறுதியாக நிராகரிக்கிறோம். எனவே இத்தகைய முயற்சிகளை சீனா கைவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×