search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
    X
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் ஒரு ஊழல் வழக்குப்பதிவு

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். பனாமா கேட் ஊழல் வழக்கில் இவரை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தகுதி நீக்கம் செய்தது.

    அதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி அல்ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையவில்லை.

    பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்து பார்த்துவிட்டதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நவாஸ் ஷெரீப் தற்போது லண்டனில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே நவாஸ் ஷெரீப் மீதான மேலும் பல ஊழல் வழக்குகளை அந்த நாட்டின் தேசிய பொறுப்புடைமை முகமை தீவிரமாக விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில், கடந்த 1986ம் ஆண்டு, நவாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாணத்தின் முதல்மந்திரியாக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவருக்கு விதிமுறைகளை மீறி நிலத்தை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தற்போது நவாஸ் ஷெரீப் உள்பட 4 பேர் மீது ஊழல் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 1986ம் ஆண்டு, லாகூர் மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக இருந்த மிருதன் மிர் சகிலூர் ரஹ்மான் என்பவருக்கு சுமார் 30,000 சதுர மீட்டர் அளவு நிலத்தை சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.

    இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு பயாஸ் ரசூல், மியான் பாசீர் ஆகிய 2 அரசு ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நில மோசடி சம்பவம் தொடர்பாக நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட 4 பேர் மீது அந்த நாட்டு தேசிய பொறுப்புடமை கோர்ட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட 4 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×