search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் மஜித் தாஹேரி
    X
    தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் மஜித் தாஹேரி

    ஈரான் டாக்டரை விடுதலை செய்தது அமெரிக்கா

    ஈரானை சேர்ந்த தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் மஜித் தாஹேரியை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது.
    வாஷிங்டன்:

    ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து 2018-ம் ஆண்டு அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே விரோதப்போக்கு உருவானது. ஈரான் மீது அமெரிக்கா தொடர் பொருளாதார தடைகளை விதித்து வந்தது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்து ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொன்றதைத் தொடர்ந்து இரு தரப்பும் மோதல் ஏற்பட்டது.

    இதற்கு பழிவாங்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க கைதி மைக்கேல் ஒயிட்டை ஈரான் விடுதலை செய்தது. இதை வரவேற்று ஈரானுக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என கோடிட்டுக்காட்டினார்.

    இப்போது அமெரிக்கா தான் சிறை வைத்திருந்த ஈரானை சேர்ந்த தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் மஜித் தாஹேரியை விடுதலை செய்துள்ளது.

    இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தோல் மருத்துவ நிபுணராக தொழில் செய்து வந்தார். ஈரானுக்கு தொழில் நுட்ப பொருளை ஏற்படுத்தி செய்ததின் மூலம் அவர் அமெரிக்க பொருளாதார தடையை மீறியதாகவும், வங்கியில் தொடர்ந்து 10 ஆயிரம் டாலருக்கு குறைவாக டெபாசிட் செய்து வந்து, அதுபற்றிய நிதி அறிக்கை தேவைகளை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகள், பயனற்றது, நியாயமற்றது என கூறினார்.

    இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள டாக்டர் மஜித் தாஹேரி ஈரான் திரும்பி விட்டார். அவரை டெக்ரான் விமான நிலையத்தில் துணை வெளியுறவு மந்திரி உசேன் ஜாபேரி அன்சாரி வரவேற்றார்.

    இது இரு நாடுகள் இடையே மீண்டும் உறவு துளிர்ப்பதற்கான வாய்ப்பாக அமையலாம் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
    Next Story
    ×