search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா.சபை
    X
    ஐ.நா.சபை

    பிற நாடுகளுக்கு உதவும் இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு

    கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கிற இந்தியா, பிற தெற்காசிய நாடுகளுக்கு மட்டுமல்லாது உலக நாடுகளுக்கு உதவி வருகிறது.
    நியூயார்க்:

    கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகளாவிய போர் நடந்து கொண்டிருக்கிறது. 58 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

    இந்த போரில் முக்கிய பங்கு வகிக்கிற இந்தியா, பிற தெற்காசிய நாடுகளுக்கு மட்டுமல்லாது உலக நாடுகளுக்கு உதவி வருகிறது.

    பல நாடுகளுக்கு நன்கொடையாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும், பாரசிட்டமால் மாத்திரைகளையும், உணவுப்பொருட்களையும் இந்தியா வழங்கி இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு உதவிகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது.

    இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நோயின் உலகளாவிய நிலை குறித்து காணொலி காட்சி வழியாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உரையாடினார்.

    இதில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டி.எஸ். திருமூர்த்தியும் கலந்து கொண்டார். அவரிடம் பேசுகையில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பிற நாடுகளுக்கு இந்தியா செய்து வருகிற உதவிகளை பாராட்டினார்.

    இதுபற்றி திருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்த கூட்டத்தில் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இந்தியாவுக்கு வந்த நினைவுகளை அன்புடன் நினைவுகூர்ந்தார். கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மற்ற நாடுகளுக்கு இந்தியா செய்து வருகிற உதவிகளை மனதார பாராட்டினார்” என கூறி உள்ளார்.

    ஐ.நா. சபை பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், இனி வரும் காலங்களில் ஐ.நா.வில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தியுடன் இணைந்து நெருங்கிப் பணியாற்றுவதில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் என கடந்த வாரம் குறிப்பிட்டார்.

    அப்போது அவர், “ஐ.நா.சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள திருமூர்த்தியை நாங்கள் வரவேற்கிறோம். அவருடன் இணைந்து செயல்படுவதை பொதுச்செயலாளர் எதிர்நோக்குகிறார் என்பதை நான் அறிவேன்” என குறிப்பிட்டார்.

    ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டம் ஜூன் மாதம் 17-ந் தேதி கூடுகிறது. அப்போது பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான 5 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த பதவி 2 ஆண்டு காலத்துக்கு உரியது. ஆசிய பசிபிக் குழுவில் இருந்து இந்தியாவுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் போட்டியை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய பசிபிக் நாடுகள் கடந்த ஆண்டு ஒருமனதாக ஒப்புக்கொண்டன.

    இந்த முக்கியமான தருணத்தில் ஐ.நா.சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக திருமூர்த்தி பொறுப்பேற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
    Next Story
    ×