search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை - டிரம்ப் அதிரடி பேட்டி

    கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
    வாஷிங்டன்:

    கொரோனா வைரஸ் தொற்று, சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ல் தோன்றியது. இப்போது சுமார் 200 நாடுகளில் பரவி விட்டது. ஏறத்தாழ 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகமெங்கும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேலானோர் இறந்தும் உள்ளனர்.

    இந்த வைரஸ் தொற்றுநோய் தோற்றம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் உள்ளது. மேலும், சீனா இந்த வைரஸ் பற்றிய தகவல்களை மூடி மறைத்து விட்டதாகவும், சீனா நினைத்திருந்தால் அந்த நாட்டுக்குள்ளேயே இந்த வைரசை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.

    அமெரிக்காவில் இந்த வைரஸ் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவி விட்டது. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றும் விட்டது. இதுவரையில் அமெரிக்கா இதுபோன்ற நிலையை சந்தித்தது இல்லை.

    ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை....

    இதையொட்டி டிரம்ப் அளித்த பேட்டியின்போது, “சீன அதிபர் ஜின்பிங்குடன் இப்போது நான் பேச விரும்பவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.

    அப்போது ஒரு நிருபர், “எதற்காக சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை என்று கூறுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு டிரம்ப் பதில் அளித்தபோது, “ இந்த ஆண்டு தொடக்கத்தில் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டை விட நிறைய அமெரிக்க பொருட்களை சீனா வாங்குகிறது. அவர்கள் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் நிறைய செலவுசெய்கிறார்கள். ஆனாலும் அதற்காக நான் கொஞ்சம் சுவையை இழந்தேன். நீங்கள் புரிந்து கொள்ளலாம்” என குறிப்பிட்டார்.

    முன்னதாக டிரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் சீனா உடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச விரும்பவில்லை. சீனா நமது பொருட் களை நிறையவே வாங்குகிறது. ஆனால் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்தபோது, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மை உலர்ந்து விட்டது. எனவே நான் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சிலிர்த்துப்போய்விடவில்லை.

    கொரோனா வைரஸ் தொற்று நோயால் இத்தனை பாதிப்பு ஏற்பட்டு இருக்கக்கூடாது. இது சீனாவில் இருந்து வந்ததுதான். இது வெளி உலகுக்கு பரவுவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது 186 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷியா இப்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாட்டையும் பார்க்கிறீர்கள். நீங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறலாம்.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கெய்லி மெக்கானியும் நிருபர்களிடம் பேசினார். அவர், “சீனா மீது ஜனாதிபதி விரக்தி அடைந்துள்ளார். சீன ஜனாதிபதியுடன் எப்போது மீண்டும் பேசத்தொடங்குவது என்பதை ஜனாதிபதியிடம் விட்டு விடுகிறேன். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அம்சத்தை அறிந்திருப்பது முக்கியமானது. ஆனால் அந்த தகவல்கள் மெதுவாகத்தான் சீனாவால் உலக சுகாதார நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஷாங்காயில் உள்ள ஒரு பேராசிரியருக்கு இன்னும் கொரோனா வைரஸ் மரபணு வரிசை முறை வழங்கப்படவில்லை. சீனாவில் இருந்து எதற்காக விமானங்கள் வெளியே செல்ல அனுமதித்தார்கள்? பிற நாடுகளின் விமானங்களை ஏன் தடுத்து நிறுத்தினார்கள்?” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்த தொற்றுநோய் சீனாவில் இருந்து வந்தது என்பதை அறிவோம். அந்த தகவலை ஏன் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை? இது ஏற்கத்தக்கது அல்ல. எனவேதான் ஜனாதிபதி சீனா மீது விரக்தி அடைந்துள்ளார். இந்த பிரச்சினையை நான் அவரிடமே விட்டுவிடுகிறேன்” என்று கூறினார்.

    ஆனால் கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தை சீனா மூடி மறைத்து விட்டது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை அந்த நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. அதுமட்டுமல்ல, உகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் தோன்றியதுதான் இந்த வைரஸ் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி கூறுவதன்மூலம் இந்த விவகாரத்தை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் சீனா குற்றம் சாட்டுகிறது.

    Next Story
    ×