search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி- எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை

    உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
    ரோம்:

    மனித குலத்தையே உருக்குலைத்துள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு சில நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சோதனை அடிப்படையில் நல்ல பலனைக் கொடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

    ஆனால் கொரோனாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.

    இந்நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன. மனித உடலிலும் வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது.

    மேலும், தடுப்பூசியை பரிசோதித்தபோது, இது மனித அணுக்களில் உள்ள வைரஸை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    இத்தாலியில் இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆய்வுகளில் இது மிகவும் முன்னேறிய கட்டம் என்று கூறிய அவர், கோடை காலத்தில் மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தும் முழுமையான ஆராய்ச்சி தொடங்கும் என்றார். தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு, சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×