search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    என்ன நடக்கிறது அமெரிக்காவில்? ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 919 பேர் உயிரிழந்துள்ளனர்.
    நியூயார்க்:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி உள்ளது. வைரஸ் தாக்குதலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 41 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 47 ஆயிரத்து 912 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

    வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து ஆயிரத்து 828 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 81 ஆயிரத்து 968 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொண்டு செல்லும் காட்சி

    தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 28 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 612 ஆக அதிகரித்துள்ளது.

    அதேபோல், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.

    உலக அளவில் இத்தாலி (17,127 பேர்), ஸ்பெயின் (14,045 பேர்) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (12,790 பேர்) மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.   
    Next Story
    ×