search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பு மருந்து சோதனை
    X
    கொரோனா தடுப்பு மருந்து சோதனை

    கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு - எலிக்கு நடத்திய சோதனை வெற்றி

    கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் எலிக்கு நடத்திய சோதனை வெற்றி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    கொரோனா நோய் வேகமாக பரவி வருவதை அடுத்து அதை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

    பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டா, லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

    இதே குழுவினர் 2003-ம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும், 2014-ம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்தனர்.

    தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸ் மற்றும் மெர்ஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும். எனவே கடந்த கால மருந்து கண்டுபிடிப்பு முறையிலேயே நிபுணர்கள் குழு கொரோனாவுக்கும் மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடத்தியது. அதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

    இந்த தடுப்பு மருந்தை எலிக்கு செலுத்தி பரிசோதித்தனர். அது வெற்றிகரமாக செயல்படுகிறது. அதாவது உடலில் கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி அதை அழிக்கிறது. எனவே இந்த மருந்தை மனிதனுக்கு பயன்படுத்தினால் நோய் தாக்குதலை தடுத்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

    ஆனாலும் இன்னும் சில பரிசோதனைகள் நடத்த வேண்டியது உள்ளது. முதலில் இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, புதிய மருந்து ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதல் பெற வேண்டும்.

    இதற்காக விண்ணப்பிக்கும் பணியில் ஆய்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒப்புதல் கிடைத்த பிறகு மனிதர்களுக்கு சோதனை நடத்தப்படும். அதுவும் வெற்றி பெற்றால் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.

    ஆனாலும் அனைத்து பணிகளும் முடிந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் வரை ஆகலாம் என்று நிபுணர் குழுவினர் கூறினார்கள்.

    Next Story
    ×