search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
    X
    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

    தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா- பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது

    உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது. ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 824 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    ஜெனிவா:

    உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

    இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 88 பேருக்கு வைரஸ் பரவியிருந்தது. இவர்களில் இதுவரை 33 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் மேலும் 24 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு 34 ஆயிரத்தை எட்டியது. 

    மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்

    மேலும், 5 லட்சத்து 37 ஆயிரத்து 893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26 ஆயிரத்து 718 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 824 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    கொரோனாவால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 10 ஆயிரத்து 779 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் ஸ்பெயின் (6803 பலி), சீனா (3304 பலி) ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்காவில் 2489 பேரும், பிரான்சில் 2606 பேரும், ஈரானில் 2640 பேரும், பிரிட்டனில் 1228 பேரும் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×