search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க தூதரகம்
    X
    அமெரிக்க தூதரகம்

    அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதால், மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்தது. எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் வெடிக்கவில்லை. இரு தரப்பிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதேசமயம், இரு நாடுகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறியும் எச்சரிக்கை விடுத்தும் அறிக்கை போரில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நேற்று 3 ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தூதரக ஊழியர்கள் காயமடைந்ததாக தகவல் இல்லை. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாக்தாத்தில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

    தூதரகத்தை பாதுகாப்பதற்கான கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஈராக் அரசிடம் கூறியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

    ‘இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை பதற்றமாகவே உள்ளது. ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்கள் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. எனவே, நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறோம்’ என்றும் அவர் கூறினார்.

    செப்டம்பர் மாதத்தில் இருந்து ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகள் 14க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×