search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள்- டிரம்ப் வேண்டுகோள்

    என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள் என செனட் உறுப்பினர்களுக்கு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் பதவி பறிப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என 2 அமைப்புகள் உள்ளன.

    முதலில் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். அதன்பிறகு அந்த தீர்மானம் செனட் சபைக்கு கொண்ட செல்லப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் அதிபருடைய பதவியை பறிக்க முடியும்.

    தற்போதைய அதிபர் டொன்ல்டு டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பதவி பறிப்பு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.

    டிரம்ப் மீது 2 குற்றச்சாட்டுகளை கூறி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

    அடுத்து நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவரது மகன் உக்ரைன் நாட்டில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யும்படி உக்ரைன் அதிபருக்கு டொனல்டு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் பதவி பறிப்பு தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும் கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் மேலும் சில தவறுகளில் சம்பந்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டு இருந்தது.

    இது சம்பந்தமாக பாராளுமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது.

    அதற்கு டிரம்ப் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மேலும் சாட்சிகளுக்கு இடையூறு அளிக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் 2-வது பதவ பறிப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த இரு தீர்மானங்களும் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18-ந் தேதி விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் இரு தீர்மானங்களும் சபையில் நிறைவேறின.

    அடுத்ததாக இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி அந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

    இன்னும் ஒரு வாரத்தில் செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் செனட் சபையில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்புக்கு விடப்படும்.

    பிரதிநிதிகள் சபையை பொறுத்த வரையில் பாதிக்கு மேல் ஓட்டு கிடைத்தாலே தீர்மானம் நிறைவேறி விடும்.

    ஆனால், செனட் சபையில் 3-ல் 2 பங்கு பேர் ஆதரவாக ஓட்டு போட்டால்தான் தீர்மானம் நிறைவேறியதாக கருதப்படும்.

    செனட் சபையில் டிரம்ப் கட்சியான குடியரசு கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, அங்கு தீர்மானம் நிறை வேறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. இதனால் டிரம்ப் பதவி பறிபோகாது என்றே கருதப்படுகிறது.

    இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் டுவிட்டர் தளம் மூலம் தனது கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    என் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்கள். அவர்களால் எந்த சாட்சியத்தையும் கொண்டு வர முடியவில்லை. மோசடியாக புகார் கூறுகிறார்கள்.

    நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம் என்பது போல் பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சியினரும் கூக்குரலிடுறார்கள். அவர்களுடைய செயல் நியாயமற்றது. பாராளுமன்ற வரலாற்றுக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

    நான் எந்த தவறும் செய்யாதபோது, என் மீது ஏன் களங்கம் இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு விவரங்களை முழுமையாக படித்து பாருங்கள். அதில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது.

    இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும். புரளியாக கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதை விட வேறு எதுவும் நடக்காது. என் மீது விசாரணைக்காவது செனட் சபை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும் நடைபெறாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆனால், டிரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக பிரதிநிதிகள் சபை சபா நாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கூறிய அவர் “அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

    இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான இ.மெயில்கள் கிடைத்துள்ளன. அவற்றை நிரூபிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தயாராக உள்ளார்.

    இது தொடர்பாக செனட் சபையே தற்போது முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

    Next Story
    ×