search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் டெஸ்சு நக்முரா மற்றும் தாக்குதலுக்குள்ளான கார்
    X
    டாக்டர் டெஸ்சு நக்முரா மற்றும் தாக்குதலுக்குள்ளான கார்

    ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் டாக்டர் உள்பட 6 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் தன்னார்வலர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜப்பானை சேர்ந்த டாக்டர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
    காபுல்: 

    ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ். அமைப்பு என பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டுவருகிறது. 

    அந்நாட்டின் சில பகுதிகளை  தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ள இந்த பயங்கரவாத குழுக்கள் போட்டி அரசாங்கம் நடத்திவருகின்றனர். 

    தங்கள் ஆளுமையை ஏற்க மறுக்கும் மக்களை கொடூரமாக கொன்று குவித்துவரும் பயங்கரவாதிகள் பல்வேறு தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றன. 

    இதனால் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சண்டைகளில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் செய்யும் நோக்கில் பல தன்னார்வு அமைப்புகள் அந்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. 

    உயிரிழந்த டாக்டர் டெஸ்சு நக்முரா மற்றும் தாக்குதலுக்குள்ளான கார்

    இந்த அமைப்புகளில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக இலவச சேவை செய்துவருகின்றனர். 

    இந்நிலையில், அந்நாட்டின் நங்கர்ஹர் மாகாணம் ஜலாலாபாத் நகரில் இன்று காலை ஜப்பானை சேர்ந்த டாக்டர் டெஸ்சு நக்முரா மற்றும் அவரது பாதுகாவலர்கள் 4 பேருடன் காரில் சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது அந்த காரை வழிமறித்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் கார் டிரைவர், டாக்டர் டெஸ்சு நக்முரா மற்றும் அவரது பாதுகாவலர்கள் என 6 பேரும் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இவர்கள் 6 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். 

    உயிரிழந்த டெஸ்சு நக்முரா ஆப்கானிஸ்தானில் கடந்த 15 ஆண்டுகளாக தன்னார்வலராக மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×