search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகிந்த ராஜபக்சே
    X
    மகிந்த ராஜபக்சே

    மகிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக அறிவிப்பு

    இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டின் புதிய பிரதமராக விரைவில் பதவி ஏற்கவுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.
     
    அதைத் தொடர்ந்து தனது 74-வது பிறந்த நாளையொட்டி கொழும்பு நகரில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கலந்து கொண்டு விட்டு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில்,  நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வந்தால் நல்லது. ஏற்கனவே கேபினட் மந்திரிகள் பலரும் பதவி விலகி உள்ளனர். அதிபரும், மந்திரிசபையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன் என கூறினார்.

    கோத்தபய ராஜபக்சே

    இந்நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை அதிபருக்கு ரணில்  விக்கிரமசிங்கே இன்று அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையில், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று மாலை அறிவித்துள்ளதாகவும் விரைவில் பிரதமராக மகிந்த ராஜபக்சே தனது பணிகளை தொடங்குவார் என்றும் இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் விஜயானந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் இலங்கையின் அனைத்து அதிகாரங்களும் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே சகோதரர்கள் கைகளில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×