search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கின்னஸ் சாதனை பட்டத்துடன் ஜோஹன்னா பாஸ்போர்டு
    X
    கின்னஸ் சாதனை பட்டத்துடன் ஜோஹன்னா பாஸ்போர்டு

    4520 சதுர அடியில் பூக்கள் ஓவியம் - கின்னஸ் சாதனை படைத்த ஸ்காட்லாந்து கலைஞர்

    ஸ்காட்லாந்தை சேர்ந்த வரைபட கலைஞர் 4520 சதுர அடியில் கருப்பு வெள்ளை பூக்கள் வரைந்து கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஜோஹன்னா பாஸ்போர்டு. இவர், வயது வந்தோருக்கான வனவிலங்குகள் மற்றும் மலர்கள் தொடர்புடைய வண்ண புத்தகங்களின் மூலம் புகழ்பெற்றவர். இளம் வயதில் இருந்தே படம் வரையும் கலையில் ஆர்வம் கொண்ட ஜோஹன்னா கின்னஸ் சாதனையை படைக்கும் முயற்சியாக தரையில் படம் வரைந்துள்ளார்.

    ஸ்காட்லாந்தின் அபெர்டீன்சையர் நகரில் உள்ள எல்லோன் கல்வி நிலையத்தில் பயின்ற ஜோஹன்னா தனது மகத்தான இந்த திட்டத்திற்கு அங்குள்ள ஒரு இடத்தையே தேர்வு செய்தார். 12 மணி நேரத்திற்குள் 4520 சதுர அடியில் கருப்பு வெள்ளை நிற பூக்கள் வரைந்துள்ளார்.

    தனிநபர் வரைந்த மிகப்பெரிய ஓவியத்தில் திருப்பதியைச் சேர்ந்த அமன்சிங் குலாட்டி என்ற நபர் 4416 சதுர அடியில் வரைந்ததே  இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.

    அந்த ஓவியத்தின் சாதனையை இந்த படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது என கின்னஸ் அமைப்பை சார்ந்த நடுவர்கள் உறுதிபடுத்தினர்.

    ஜோஹன்னா பாஸ்போர்டு

    ‘நான் இதற்கு முன்பு செய்த எந்த செயலை விடவும் இது மிகவும் வித்தியாசமானது. படைப்பாற்றலுக்கு கால எல்லை இருப்பதை நான் பொதுவாக ஆதரிக்க மாட்டேன், ஆனால் சில நேரங்களில் உங்களுடைய சிறந்த திறமையை வெளிக்கொணர அந்த கட்டுப்பாடு தேவை. ஓவியத்தை முடித்து உலக சாதனையை முறியடித்தது ஒரு பெரிய நிம்மதி, ஏனென்றால் இதற்காக நான் அதிக நேரம் செலவிட்டுள்ளேன்’, என ஜோஹன்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு அமன்சிங் குலாட்டி, காந்தியின் மிகப்பெரிய ஓவியத்தை வரைந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×