search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் சண்டை நிறுத்தம்
    X
    சிரியாவில் சண்டை நிறுத்தம்

    சிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள்

    துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி சிரியா வடக்கு எல்லையில் இருந்து குர்து படையினர் வெளியேறினர்.
    அங்காரா :

    சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து படையினரை விரட்டியடித்துவிட்டு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அங்கு துருக்கியில் உள்ள 36 லட்சம் சிரிய அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது.

    இதற்காக சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து இன படையினரை குறிவைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது.

    துருக்கியின் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதோடு, 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து, சண்டையை நிறுத்தும்படி எச்சரித்தது. அத்துடன் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் நேரடியாக துருக்கிக்கு சென்று அதிபர் தாயீப் எர்டோகனை சந்தித்து இது குறித்து பேசினர்.

    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சிரியாவின் வடக்கு பகுதியில் 5 நாட்களுக்கு சண்டையை நிறுத்திவைப்பதாக கடந்த வியாழக்கிழமை எர்டோகன் அறிவித்தார்.

    இந்த 5 நாட்களுக்குள் துருக்கி ‘பாதுகாப்பு மண்டலம்’ என்று வரையறுக்கும் பகுதியில் இருந்து குர்து படையினர் வெளியேற வேண்டுமென துருக்கி கூறியது.

    ஆனால் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக துருக்கி ராணுவமும், குர்து படையினரும் பரஸ்பர குற்றம் சாட்டின.

    இதையடுத்து, செவ்வாய்க்கிழமைக்குள் குர்து படைகள் பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறாவிட்டால் தாக்குதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும், குர்துக்களின் தலை நசுக்கப்படும் என்றும் எர்டோகன் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் துருக்கியின் எல்லையையொட்டி சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராஸ் அல்-அய்ன் நகரில் இருந்து குர்து படைகள் வெளியேறின.

    இதுபற்றி குர்து படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் படி எங்களது கட்டுப்பாட்டு பகுதியான ரஸ் அல்-அய்ன் நகரில் இருந்து வீரர்கள் வெளியேறினர். அந்த நகரில் தற்போது எங்கள் வீரர்கள் யாரும் இல்லை” என்றார்.

    குர்து படைகள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறியதால் சிரியாவின் வடக்கு பகுதியில் முழுமையான சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள தல் தமர் நகரில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து வெளியேறினர்.

    ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களில் அமெரிக்க வீரர்கள் சிரியாவில் இருந்து புறப்பட்டு அண்டை நாடான ஈராக்குக்கு சென்றனர்.

    அமெரிக்க படைகள் புறப்படுவதற்கு முன்னதாக சிரியாவின் அல் ஹசாகா பகுதியில் இருந்த தங்களது விமான தளங்கள் மீது தாங்களே குண்டு வீசி அனைத்தையும் அழித்து விட்டு சென்றுள்ளதாக சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×