search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கி விமானப் படை தாக்குதல்
    X
    துருக்கி விமானப் படை தாக்குதல்

    சிரியா மீது துருக்கி விமானப்படை மீண்டும் தாக்குதல்

    போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்புதல் அளித்த துருக்கி அரசு சிரியா மீது இன்று மீண்டும் தாக்குதலை தொடங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
    அன்காரா:

    சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள் சிரியாவை விட்டு வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்தது.

    இந்த கொடூர தாக்குதல்களில், குர்து போரளிகள் மற்றும் அப்பாவி மக்கள் என மொத்தம் 600 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    துருக்கியின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா, துருக்கி மீது பொருளாதார தடைகளை விதிப்பதாக அச்சுறுத்தப்பட்டது. துருக்கி அதிபருக்கு டிரம்ப் போர் நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி கடிதம் எழுதினார். ஆனால் துருக்கி அரசு இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல் தாக்குதல்களை தொடர்ந்தது.

    தாக்குதலில் துருக்கி ராணுவம்
     
    இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் துருக்கிக்கு விரைந்தனர்.

    தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார். துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் மைக் பென்ஸ் இடையே நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையால் ஏற்படும் பேரிழப்புகளை தவிர்ப்பதே தனது முதல் பணி என பென்ஸ் தெரிவித்தார்.

    துருக்கிய எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தெற்கே உள்ள ஒரு பாதுகாப்பு வளையத்திலிருந்து குர்திஷ் போராளிகளை திரும்பப் பெறுமாறு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குர்து போராளிகளும் இந்த போர்நிறுத்த ஒப்பந்ததத்திற்கு கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

    ராஸ் அல்-ஐன் முதல் தால் அபியாட் வரையிலான பகுதியில் உள்ள குர்து போராளிகள் திரும்ப பெறப்படுவார்கள். ஆனால், மற்ற பகுதிகளில் உள்ள படைகள் பற்றி எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும்  குர்து படை தலைவர் மாஸ்லம் அஃப்டி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சுமார் ஒருமணி நேரம் மட்டுமே நீடித்ததாகவும் ராஸ் அல்-ஐன் நகரின் கிழக்கில் உள்ள பாப் அல்-கெய்ர் கிராமத்தின் மீது துருக்கி நாட்டு விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்ததாக சிரியாவில் உள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்பின் தலைவர் அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×