
இந்த குழுவின் வருடாந்திர கூட்டம் இந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியதால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஈரான், வடகொரியா வரிசையில் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது.
மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியை தடுப்பது தொடர்பாக சர்வதேச நிதி கண்காணிப்பகம் ஒரு செயல் திட்டத்தை பாகிஸ்தானுக்கு பரிந்துரைத்திருந்தது.
இந்தியா மீது பயங்கரவாத தாக்குதலை கட்டவிழ்த்து விடும் லஷ்கர்-இ-தொய்பா, ஜைஷ்-இ-ஹிந்த் உள்ளிட்ட 27 அமைப்புகளின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு ஓராண்டு கெடு விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட கெடுக்காலம் ஓராண்டு முடிந்த பிறகும் பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
27 அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுட்டிக்காட்டியதில் வெறும் 5 அமைப்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ள பாகிஸ்தான் அரசு பயங்கரவாத இயக்கங்களுக்கான நிதியுதவி சென்று சேருவதை உரிய முறையில் தடுக்க தவறி விட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட 40 அம்சங்களில் 10 அமசங்களை கூட பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை.
2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இவ்விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டின் கூட்டத்தின்போது பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடாக பாகிஸ்தானுடனான நிதி மற்றும் வர்த்தகம் தொடர்பான விவகாரங்களை இதர நாடுகள் விழிப்பாக கையாள வேண்டும் எனவும் எப்.ஏ.டி.எப். கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.