search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமுவேல் லிட்டில்
    X
    சாமுவேல் லிட்டில்

    35 ஆண்டுகளில் 93 கொலைகள் - அமெரிக்காவை அதிரவைத்த கொடூர கொலைகாரன்

    1970-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 93 பெண்களை தாம் கொலை செய்ததாக கூறி சாமுவேல் லிட்டில் அதிரவைத்துள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தை சேர்ந்தவர் சாமுவேல் மெக்டவல் (வயது 79). அவரது உயரம் காரணமாக அவரை ‘சாமுவேல் லிட்டில்’ என்று அழைக்கின்றனர். முன்னாள் குத்துச் சண்டை வீரரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    விசாரணையின் ஒரு பகுதியாக அவருக்கு மரபணு பரிசோதனை செய்தபோது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1987-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 பெண்களை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் சில சந்தேக மரணங்கள் தொடர்பாக சாமுவேல் லிட்டிலிடம் மத்திய புலனாய்வு குழு (எப்.பி.ஐ) விசாரணை நடத்தி வந்தது. இந்த நீண்ட விசாரணையில் அதிரவைக்கும் பல உண்மைகள் வெளியாகி உள்ளன. 1970-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 93 பெண்களை தாம் கொலை செய்ததாக கூறி சாமுவேல் லிட்டில் அதிரவைத்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் சாமுவேல் லிட்டில் 50 கொலைகள் செய்ததை மத்திய புலனாய்வு குழு உறுதி செய்துள்ளது. மற்ற கொலைகளுக்கான ஆதாரங்களையும் சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    சாமுவேல் லிட்டில் அளித்த வாக்குமூலத்தில், அவர் பெரும்பாலும் கருப்பின பெண்களை குறிவைத்தே கொலைகளை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட மற்றும் போதைக்கு அடிமையான பெண்களையே அவர் அதிகம் கொலை செய்துள்ளார்.
    Next Story
    ×