search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா அதிகாரிகளுக்கு விசா மறுப்பு  ( மாதிரிப் படம்)
    X
    சீனா அதிகாரிகளுக்கு விசா மறுப்பு ( மாதிரிப் படம்)

    உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

    சீனாவில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது அடக்குமுறைகளை கையாளும் சீன அரசு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்: 

    வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால். உய்கர் முஸ்லிம் மக்களுக்கும், அரசுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது. 

    சமீப காலமாக உய்கர் முஸ்லிம் மக்கள் மீது சீனா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இதையடுத்து ஷின்ஷியான் பிராந்தியத்தில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி சீனாவின் 28 நிறுவனங்களை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்து தடை விதித்தது. பின்னர் சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக்கேல் பாம்பியோ கூறியதாவது: 

    ஷின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பகுதியில் வசிக்கும், உய்கர், கசக்ஸ், கிரிகிஸ் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினர் மீது சீன அரசு, அதிகளவு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. 

    அப்பகுதியில் உள்ள சிறுபான்மையினரை காவலில் வைத்திருப்பவர்கள், அடக்குமுறையை கையாளும் அதிகாரிகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் போன்ற சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    இந்த அடக்குமுறைகளை நிறுத்துவதுடன், காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் சீன முஸ்லிம் சிறுபான்மையினர், வலுக்கட்டாயமாக சீனாவிற்கு திரும்பி வர அந்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் 10 மாத காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. இதில் சீன நிறுவன அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×