search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி
    X
    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி

    ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு - 24 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பேசிய தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.  பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பிரசார கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள்

    அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.  இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 30-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தலைநகர் காபுலில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    Next Story
    ×