search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிம் ஜாங் அன்
    X
    கிம் ஜாங் அன்

    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

    வடகொரியா மீண்டும் குறுகிய தூர ஏவுகணைகளை சோதித்தது. அதே சமயம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளது.
    பியாங்யாங்:

    உலகின் இருதுருவங்களாக விளங்கி வந்த வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இடையே கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சந்திப்பு நடைபெற்றது.

    இந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர் வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் சோதனைகளை நிறுத்தியதால், கொரிய தீபகற்பத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த பதற்றம் தணிந்தது.

    எனினும் அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பேசி முடிவு எடுப்பதற்காக இரு நாட்டு தலைவர்களும் கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்தனர்.

    ஆனால் எதிர்பாராத வகையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மீண்டும் விரிசல் உருவானது.

    இப்படியான சூழலில் திடீர் திருப்பமாக கடந்த ஜூன் மாதத்தில், வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் கிம் ஜாங் அன்னை, டிரம்ப் சந்தித்தார்.

    உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த எதிர்பாராத சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு குறித்த இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர இருநாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர்.

    ஆனால் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை தொடங்கப்படாத சூழலில் கடந்த மாதம் கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.

    கடும் எதிர்ப்பையும் மீறி கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை எச்சரிக்கும் விதமாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

    அத்துடன் தென்கொரியா உடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாகவும் வடகொரியா அறிவித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவானது.

    இந்த நிலையில், அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் துணை வெளியுறவு மந்திரி சோ சன் ஹூய் கூறியதாவது:-

    அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்த பேச்சு வார்த்தை இந்த மாத இறுதியில் நடைபெற வேண்டும் என வடகொரியா விரும்புகிறது.

    ஒப்பந்தத்திற்கான நம்பிக்கையை உயிருடன் வைத்திருக்க அமெரிக்கா ஒரு புதிய அணுகுமுறையுடன் இந்த பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.

    இரு தரப்பின் நலன்களுக்கு பலன் அளிக்கும் அடிப்படையில் அமெரிக்கா ஒரு மாற்று அணுகுமுறையை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். அது வடகொரியாவால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துணை வெளியுறவு மந்திரியின் இந்த கருத்து வெளிவந்த சில மணி நேரத்துக்குள்ளாக குறுகிய தூரம் சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதித்தது.

    தெற்கு பியாங்கன் மாகாணத்தில் இருந்து கிழக்கு பகுதியை நோக்கி ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும் 330 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று விழுந்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் வடகொரியாவின் அண்மைகால ஏவுகணை சோதனைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    Next Story
    ×