search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ டிரம்ப் தயார்

    காஷ்மீர் பிரச்சினையில் உதவுமாறு இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், அதை ஏற்க டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
    வாஷிங்டன்:

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும், காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமான வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் உள்ள நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனென்றால், காஷ்மீரில் உள்ள சூழ்நிலை, அந்த பிராந்தியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால், ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் காஷ்மீர் நிலவரத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.

    இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், காஷ்மீரில் பதற்றத்தை தணிப்பதற்கு அவர் உதவ தயாராக இருக்கிறார். ஆனால், அதிகாரபூர்வ மத்தியஸ்துக்கு இந்தியா அழைப்பு விடுக்காது என்று கருதுகிறோம்.

    இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடக்கும் மாநாட்டில் பிரதமர் மோடியை டிரம்ப் இந்த வாரம் சந்திக்கிறார். அப்போது, காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்று மோடியிடமே கேட்க உள்ளார். காஷ்மீரில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்வார்.

    மேலும், அனைத்து தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவார். காஷ்மீரில் மக்கள் நடமாட்டம், தொலைத்தொடர்பு ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று அவர் எதிர்பார்க்கிறார். போராட்டத்தை ஒடுக்குவதில் பொறுமையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

    ராணுவ ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுதல், வர்த்தகம் ஆகிய விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேச்சு நடத்துவார்கள்.

    அதுபோல், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தானை டிரம்ப் கேட்டு வருகிறார். இந்தியா மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுக்களை ஒடுக்குமாறும் வற்புறுத்தி வருகிறார்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
    Next Story
    ×