search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் மோடி பேச்சுவார்த்தை
    X

    ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் மோடி பேச்சுவார்த்தை

    ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள மோடி, இன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    ஒசாகா:

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெற உள்ளது. இதில் ஜி20 அமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை ஒசாகா வந்து சேர்ந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சுவிசோட்டல் நங்காய் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை இந்திய சமூகத்தினர் வரவேற்றனர். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.



    இந்நிலையில், இன்று மதியம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை மோடி சந்தித்தார். ஜப்பானில் புதிய பேரரசரின் ரீவா சகாப்தம் தொடங்கிய பிறகு, இரு தலைவர்களிடையே நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் நலன்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அக்டோபர் மாதம் நடைபெற உள்ள புதிய மன்னரின் முடிசூட்டு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார் என்ற தகவலை மோடி தெரிவித்தார்.

    ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த தனக்கும் தன்னுடன் வந்த இந்திய குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக ஜப்பான் பிரதமருக்கு மோடி நன்றி தெரிவித்தார். மேலும், ஜப்பான் பிரதமரின் இந்திய வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். புதிய பேரரசரின் ரீவா சகாப்தம் தொடங்கியதையொட்டி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஜப்பான் மக்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    Next Story
    ×