search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி- பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்
    X

    அமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி- பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

    அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.
    நியூயார்க்:

    அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்த நிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.



    எனவே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அதை திரும்ப பெற்றார். எனினும் ஈரான் மீது கோபத்தில் இருக்கும் அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

    இந்த புதிய பொருளாதார தடைகளால் ஈரான் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையையும் நிராகரித்துள்ளது.

    இதுபற்றி ஈரான் நாட்டின் ஐநா தூதர் மஜித் தாகத்  ரவாஞ்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை அமெரிக்கா நிறுத்த வேண்டும். மிரட்டும் போக்கு தொடரும்பட்சத்தில், பேச்சுவார்த்தையை தொடங்க முடியாது. அச்சுறுத்தல் இருக்கும் வரை, ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்க எந்த வழியும் இல்லை. அத்தகைய பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை.

    பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஐநா தனது பங்களிப்பை வழங்கும்படி கேட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×