search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு
    X

    இலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு

    258 உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் நீட்டித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

    இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட சுமார் 100 பேர் கைது செய்து விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.



    ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த அவசரநிலை உத்தரவைமேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும் அரசு அறிவிக்கையில் மைத்ரிபாலா சிறிசேனா மே மாதம் 22-ம் தேதி கையொப்பமிட்டார். கடந்த மாதம் இறுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறிசேனா, நாட்டில் சட்டம்-ஒழுங்கு 99 சதவீதம் அளவுக்கு இயல்புநிலைக்கு திரும்பி விட்டதாகவும், அவசரநிலை சட்டத்தை இனியும் நீட்டிக்கும் நிலை இனி ஏற்படாது என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் நீட்டிக்கும் உத்தரவில் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்பமிட்டுள்ளார்.
    Next Story
    ×