search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் 2 முஸ்லிம் மந்திரிகள் மீண்டும் பதவி ஏற்றனர்
    X

    இலங்கையில் 2 முஸ்லிம் மந்திரிகள் மீண்டும் பதவி ஏற்றனர்

    இலங்கையில் 9 முஸ்லிம் மந்திரிகள் பதவி விலகிய விவகாரத்தில் புதிய திருப்பமாக, 2 மந்திரிகள் மீண்டும் பதவி ஏற்றனர்.
    கொழும்பு:

    இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 19 எம்.பி.க்கள், முஸ்லிம்கள் ஆவர். அவர்களில் 9 பேர் மந்திரிகளாக பதவி வகித்து வந்தனர்.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 21-ந் தேதி, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், 258 பேர் பலியானார்கள். தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கம் இதில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    அந்த இயக்கத்துக்கு ஒரு முஸ்லிம் மந்திரியும், 2 மாகாண கவர்னர்களும் நிதி உதவி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக முஸ்லிம்களின் கடைகள், சொத்துகள் சூறையாடப்பட்டதற்கு முஸ்லிம் மந்திரிகள் கண்டனம் தெரிவித்தனர். முஸ்லிம்கள் பாரபட்சமாக கைது செய்யப்படுவதாக அவர்கள் கூறினர்.

    இந்த அதிருப்தியின் தொடர்ச்சியாக, கடந்த 3-ந் தேதி, 9 முஸ்லிம் மந்திரிகளும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த 2 மாகாண கவர்னர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று புத்த பிட்சுக்கள் வேண்டுகோள் விடுத்தனர். 2 வாரங்கள் கடந்தநிலையில், இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக, முஸ்லிம் மந்திரிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில், திடீர் திருப்பமாக, பதவி விலகிய 9 முஸ்லிம் மந்திரிகளில் 2 பேர் நேற்று மீண்டும் மந்திரிகள் ஆனார்கள். அவர்களுக்கு அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மீண்டும் பதவி ஏற்ற கபீர் ஹசிம், ஏ.எச்.எம்.ஹலீம் ஆகிய 2 பேரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். மீதி 7 பேரும் இலங்கை முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்கள். அவர்கள் மீண்டும் பதவி ஏற்பார்களா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை.

    இதற்கிடையே, தொடர் குண்டு வெடிப்புக்கான காரணங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்வுக்குழு முன்பு மவுலவி சலான் என்ற மதகுரு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, பயங்கரவாதம் வளர்ந்து வருவது குறித்து கதான்குடியை சேர்ந்த மதகுருக்கள், அதிபர் அலுவலகத்துக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் 2017-ம் ஆண்டே தெரிவித்துள்ளதாக கூறினார்.

    ஆனால், இந்த விசாரணை, தன் மீது பழிபோடும் வகையில் இருப்பதால், விசாரணை குழுவை கலைக்க வேண்டும் என்று அதிபர் சிறிசேனா வலியுறுத்தி வருகிறார்.
    Next Story
    ×