search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்தி வைப்பு
    X

    ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்தி வைப்பு

    ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா, மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    ஹாங்காங்:

    இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்த ஹாங்காங், 1997-ம் ஆண்டு முதல் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. அது முதல், சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது.  இந்த நாட்டின் தலைமை நிர்வாக தலைவராக கேரி லாம் உள்ளார்.

    இந்த நிலையில், அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இது, ஹாங்காங் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.



    கடந்த 9-ந்தேதி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் போர்க்கோலம் பூண்டு, வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது.

    இருப்பினும், இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் தலைமை நிர்வாக தலைவர் கேரி லாம் உறுதியாக இருந்தார்.

    இதன் காரணமாக கடந்த 12-ந்தேதி நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்கிற நிலை ஏற்பட்டது.

    1997-ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங் வந்தபின்னர் நடந்த மிகப்பெரிய வன்முறை இதுதான் என கூறப்படுகிறது. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர்.

    இது ஹாங்காங் தலைமை நிர்வாக தலைவர் கேரி லாமுக்கு தலைவலியாக அமைந்தது. சீன கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் இடையே இந்த விவகாரம் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கேரி லாம், தனது ஆலோசகர்களின் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் மக்கள் போராட்டத்தால் நிலைமை கைமீறிப்போய்க் கொண்டிருப்பதால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித் தார். மக்கள் போராட்டத்துக்கு நிர்வாகம் அடிபணிந்து விட்டதையே இது காட்டுகிறது.மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கேரி லாம் கூறியதாவது:-

    சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கையை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணிகளை சட்டசபை நிறுத்தி வைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பினருடனான எங்கள் தகவல் தொடர்புகளை மீண்டும் தொடங்குவோம். சமூகத்தின் பலதரப்பட்ட கருத்துகளையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.

    எங்கள் நடவடிக்கையில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள்தான் சமூகத்தில் சர்ச்சைகளை, பிரச்சினைகளை தூண்டி விட்டன. இதற்காக நான் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே நேரத்தில் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 
    Next Story
    ×