search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்
    X

    இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

    இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே மகன் நமல், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajapaksa #NamalRajapaksa
    கொழும்பு:

    2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது செய்தது. அதன்பிறகும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

    குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.

    தற்போது, இலங்கையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க் களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதே நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்தது.

    ராஜபக்சேவை அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்து பேசியபோது, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிதர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு ராஜபக்சே ஒப்புக்கொள்ளாததால் அவருக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில்தான் இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ராஜபக்சேயின் மகனும், எம்.பி.யுமான நமல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புதிய நிபந்தனை விதித்தார். அவர் டுவிட்டரில் தமிழில் பதிவு செய்த தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரம் பேசுவதுபோல் அமைந்துள்ளது. அதாவது ஓட்டெடுப்பில் தனது தந்தைக்கு ஆதரவு தரவேண்டும் என்று அவர் மறைமுகமாக வலியுறுத்தி இருக்கிறார்.

    அதில், ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில தனி நபர்களின் சுயநல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மற்றொரு பதிவில், ‘தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்த்து வைக்கும் வகையில் கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் அதிபர் மற்றும் பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்’ என்று கூறி இருக்கிறார்.

    225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தற்போதைய நிலையில் ராஜபக்சேவை 100 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவை 103 எம்.பி.க்களும் ஆதரிக்கின்றனர்.

    மீதமுள்ள 22 எம்.பி.க்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஏற்கனவே ராஜபக்சே அணிக்கு தாவி விட்டார். இன்னும் 4 எம்.பி.க்களின் ராஜபக்சே பக்கம் தாவலாம் என்று கூறப்படுகிறது. இவர்களின் ஆதரவு கிடைத்தாலும் கூட ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 9 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

    இதனால் மீதமுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் 6 உறுப்பினர்கள், இன்னொரு சிறு கட்சியின் ஒரு எம்.பி.யின் ஆதரவுடன் விக்ரமசிங்கே எளிதில் 113 என்னும் பெரும்பான்மை இலக்கை எட்டி விடுவார் என்று கருதப்படுகிறது.

    இதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ராஜபக்சே மகன் மறைமுக பேரத்தில் ஈடுபட்டு உள்ளார் என்று இலங்கையின் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். #Rajapaksa #NamalRajapaksa
    Next Story
    ×