search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாள பயணத்தை நிறைவு செய்து தாயகம் புறப்பட்டார் மோடி
    X

    நேபாள பயணத்தை நிறைவு செய்து தாயகம் புறப்பட்டார் மோடி

    நேபாளம் நாட்டில் இருநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை புதுடெல்லி புறப்பட்டார். #ModileavesKathmandu
    காத்மாண்டு:

    இருநாள் அரசு முறை பயணமாக நேபாளம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    புதிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டினார்.

    இன்று காலை மஸ்ட்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சென்ற அவர் புத்த - இந்து மத சம்பிரதாயங்களின்படி முக்திநாதரை வணங்கினார்.

    பிற்பகல் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி, காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.


    நேபாளம் முன்னாள் பிரதமர் புஷ்பா கமால் தஹால் பிரச்சாந்தா-வை அவர் சந்தித்து பேசினார். காத்மாண்டு மாநகராட்சி சார்பில் இன்று மாலை அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

    இந்த விழாவின்போது அவரை கவுரவிக்கும் வகையில் காத்மாண்டு நகரின் சாவியை மேயர் பிட்யா சுந்தர் ஷாக்கியா அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யுத்தப் பாதையில் இருந்து புத்தப் பாதைக்கு திரும்பிய நேபளத்தின் சிறப்பை பாராட்டி பேசினார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தின் வளர்ச்சிக்கு மலையேற்றக்குழு வழிகாட்டி போல் நின்று உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிகழ்ச்சியின்போது 55 கிலோ எடையிலான புத்தர் சிலை உள்பட அவருக்கு பல்வேறு நினைவு பரிசுகள் அளிக்கப்பட்டன. பின்னர், அனைவரிடம் இருந்தும் விடைபெற்ற பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #ModileavesKathmandu
    Next Story
    ×