search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆபத்து - அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை
    X

    ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆபத்து - அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை

    ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினால் ஆபத்தான காலகட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதாகி விடும் என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குறிப்பிட்டார்.
    நியூயார்க்:

    அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில், அந்த நாட்டுடனும், இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடனும் ஈரான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அது ஈரான் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்ளவும், பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விலக்கிக்கொள்ளவும் வழிவகுத்து உள்ளது.

    ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிசீலித்து வருகிறார். 12-ந் தேதிக்குள் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்.

    அதற்கு ஏற்ற வகையில், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வந்து உள்ளது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

    இந்த நிலையில், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பி.பி.சி. நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், ராஜ்யரீதியிலான முக்கியமான வெற்றி ஆகும். அதை பராமரித்து வர வேண்டும். நல்லதொரு மாற்றை உருவாக்காமல், இந்த ஒப்பந்தத்தை அழித்து விடக்கூடாது” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் கூறும்போது, “(ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினால்) அது ஆபத்தான காலகட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதாகி விடும்” என்று குறிப்பிட்டார்.

    அதாவது, போர் மூளும் நிலை உருவாகக்கூடும் என்பதையே ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் சூசகமாக எச்சரித்து உள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

    Next Story
    ×