search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க மாணவன் மரணத்துக்கு சித்ரவதை காரணமல்ல: வடகொரியா மறுப்பு
    X

    அமெரிக்க மாணவன் மரணத்துக்கு சித்ரவதை காரணமல்ல: வடகொரியா மறுப்பு

    கோமா நிலையில் அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரின் மரணத்துக்கு தங்களது சிறைச்சாலையில் நடந்ததாக கூறப்படும் சித்ரவதை காரணமல்ல என வடகொரியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
    சியோல்:

    அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், வாம்பியரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால், சமீபத்தில் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து, அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்த வாம்பியர் கடந்த 19-6-2017 அன்று மரணமடைந்தார். வாம்பியரின் மரணத்துக்கு வடகொரிய அரசின் கொடூர சித்ரவதைகள் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    மரணமடைந்த ஒட்டோ வார்ம்பியருக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இதற்கு காரணமான வடகொரியாவுக்கு அமெரிக்க அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க மாணவரின் மரணத்துக்கு சித்ரவதை காரணமல்ல என வடகொரிய சிறைத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் நாட்டு சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள அனைத்து குற்றவாளிகளையும் நாங்கள் ஒன்றாகவே பார்க்கிறோம். எங்கள் நாட்டு சட்டப்படியும், சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டும் அவர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இதில் ஒட்டோ வாம்பியரும் விதிவிலக்கல்ல. மனிதநேய அடிப்படையில் அவரை நாங்கள் எப்படி நடத்தினோம் என்பதுபற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் சிலர் (தென்கொரியா) எங்கள்மீது அவதூறான குற்றச்சாட்டை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×