search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்று மாசுபாடு எதிரொலி: சீனாவில் வாண வேடிக்கைகள் இல்லாத புத்தாண்டு கொண்டாட்டம்?
    X

    காற்று மாசுபாடு எதிரொலி: சீனாவில் வாண வேடிக்கைகள் இல்லாத புத்தாண்டு கொண்டாட்டம்?

    காற்று மாசுபாட்டில் உலகின் தலைநகராகவும் விளங்கிவரும் சீனத் தலைநகரான பீஜிங்கில் இந்த ஆண்டு வாண வேடிக்கைகள் இல்லாமல் புத்தாண்டை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான சீனாவில் பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளியேற்றும் புகையினால் காற்று மாசுப்பாடு மிகஅதிகமாக உள்ளது.

    தற்போது, அங்கு பெய்துவரும் பனியினால் காற்று மாசுப்பாடு பன்மடங்காக அதிகரித்துள்ளது. காற்று மண்டலத்தில் பரவியுள்ள புகை திட்டுக்கள், வளி மண்டலத்தை சென்று அடைய இயலாத வகையில் பனிப்படலம் தடுத்துள்ளதால் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நாட்டின் பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதற்கிடையில், சந்திர நாள்காட்டியின்படி தொடங்கும் சீன ஆண்டு நாளை (28-ம் தேதி) பிறக்கிறது. புத்தாண்டை வெகு எழுச்சியுடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

    இந்தியாவுக்கு இணையாக வெடிகள், வாண வேடிக்கை பட்டாசுகளை தயாரிப்பதில் முக்கிய நாடாக திகழ்ந்துவரும் சீனாவில் புத்தாண்டை முன்னிட்டு வெடி மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகளின் விற்பனை களைகட்டி வருகிறது.

    குறிப்பாக, தலைநகர் பீஜிங்கில் கடந்த ஆண்டு 719 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கடைகளின் எண்ணிக்கை 511 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுதாரணமாக பீஜிங் நகரில் நிலவிவரும் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ள உள்ளூர் நிர்வாகம், புத்தாண்டு தினத்தையொட்டி வெடிகள், வாண வேடிக்கைகள் போன்றவற்றை தவிர்க்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ’சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், சமூக பொறுப்புணர்வுடனும், காற்று மாசுப்பாட்டை மேலும் அதிகரிக்கச் செய்யும் வெடிகள், வாண வேடிக்கைகள் போன்றவற்றை தவிர்க்குமாறு உங்களது குடும்பத்தாரை நீங்கள் வழிநடத்த வேண்டும்’ என பீஜிங் மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×