search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றவரிடம் தீவிர விசாரணை
    X

    அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றவரிடம் தீவிர விசாரணை

    அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ளது, போர்ட் லாடர்டேல் விமான நிலையம். அந்த விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை பெற்றுக்கொள்கிற இடத்தில் நேற்று முன்தினம் ‘ஸ்டார் வார்ஸ் மேல் சட்டை’ அணிந்த வாலிபர் ஒருவர் புகுந்து, தன் கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார்.

    இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். அனைவரும் ஓலமிட்டவாறு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். பலர் ஆங்காங்கே கதவுகளின் பின்னாலும், நாற்காலிகளின் அடியிலும் ஒளிந்து கொண்டனர்.

    இருப்பினும் அவர் தனது கைத்துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும் வரையில் சுட்டார்.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர் இந்த தாக்குதலை நடத்தியபோது எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை என நேரில் கண்டவர்கள் சொல்கின்றனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உடனடியாக போலீசாரும், மீட்பு படையினரும் சூழ்ந்துகொண்டனர். தாக்குதல் நடத்திய வாலிபர், போலீசிடம் சிக்கினார். துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்த நிலையில் அவர் போலீசாரிடம் சரண் அடைந்தார் என்று நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய தொடர்புகள் குறித்து ஆராயப்படுகிறது.

    துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்த விமான நிலையம் மூடப்பட்டது.

    இது தொடர்பாக வெளியான முதல் கட்ட தகவல்கள் வருமாறு:-

    * துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எஸ்டீபன் சாண்டியாகோ. வயது 26.

    * சாண்டியாகோ, அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜ் என்ற இடத்தை சேர்ந்தவர்.

    * இவர் அமெரிக்க ராணுவத்தின் பியுர்ட்டோ ரிக்கோ மற்றும் அலாஸ்கா தேசிய காவல் படை பிரிவில் சேர்ந்து பணியாற்றியவர். ஈராக்கில் பணியாற்றி உள்ளார். அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று கடந்த ஆண்டு, பதவி இறக்கம் செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

    * இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.

    இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் அமெரிக்க போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் சாண்டியாகோவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    இது தொடர்பாக மத்திய உளவுப்படை (எப்.பி.ஐ.) அதிகாரி ஜார்ஜ் பிரோ நிருபர்களிடம் பேசும்போது, “எல்லா கோணத்தையும் நாங்கள் பார்க்கிறோம். பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதுவும் மறுப்பதற்கு இல்லை. இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பதை அறிந்து உறுதி செய்வோம்” என கூறினார்.

    விமான நிலைய பாதுகாப்பு அமெரிக்காவில் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உதாரணமாக சொல்லப்படுகிறது. 
    Next Story
    ×