search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் கயானாவில் இஸ்ரோவின் ஜிசாட்-18 செயற்கைகோள் ஏவுதல் ஒத்திவைப்பு
    X

    பிரான்ஸ் கயானாவில் இஸ்ரோவின் ஜிசாட்-18 செயற்கைகோள் ஏவுதல் ஒத்திவைப்பு

    பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்த இஸ்ரோவின் 'ஜிசாட்-18' செயற்கைகோள் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    பாரிஸ்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.

    இதேபோல், ஒரு சில தொலை தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

    தொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானா ‘கவ்ரவ்’ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியான்-5’ ராக்கெட் மூலம் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணியிலிருந்து 3 மணி 15 நிமிடங்களுக்குள் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், 'ஜிசாட்-18' செயற்கைகோள் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வானில் காற்று மிகவும் அதிகப்படியான வேகத்துடன் வீசுவதாக கூறப்பட்டுள்ளது. 

    அடுத்த 24 மணி நேரத்திற்குள், அதாவது அக்டோபர் 6-ம் தேதி காலை 2 மணியவில் இந்த ஜிசாட்-18 செயற்கைக்கோள் விண்ணில் ஏவ வாய்ப்புள்ளது.
    Next Story
    ×