
சென்னை:
பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. பொதுச்செயாளர் வைகோ எம்.பி. எக்சைஸ் வரியைக் குறைத்த பின்பு, பல்வேறு மாநிலங்களில் உள்ள பெட்ரோல் டீசல் விலை நிலவரம் தேவை, எந்தெந்த மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தன?, மேலும் விலையைக் குறைக்க முடியாததற்குக் காரணங்கள் என்ன?, பொதுமக்கள் நலன் கருதி, பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி. வரி வரையறைக்குள் கொண்டு வரும் திட்டம் உள்ளதா? போன்ற கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
பெட்ரோல், டீசல் விலையை, சந்தை நிலவரப்படி தீர்மானிக்க, 26.6.2010 மற்றும் 19.10.2014 ஆகிய நாள்களில் அரசு முடிவு செய்தது.
அன்று முதல், பொதுத் துறை எண்ணைய் விற்பனை நிறுவனங்கள், பன்னாட்டு நிலவரத்திற்கு ஏற்பவும், வரிக் கட்டமைப்பு, அயல்நாட்டுச் செலாவணி மதிப்பு, உள்நாட்டுப் போக்கு வரத்து மற்றும் இது போன்ற காரணிகளின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை, அவ்வப்போது மாற்றி அறிவித்து வருகின்றன. எனவே, பன்னாட்டுச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் விலை மாறுகின்றது.
2017-ம் ஆண்டு, ஜூன் 16-ந்தேதி முதல், நாடு முழுமையும், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை ஆய்வு செய்து, மாற்றங்களை அறிவிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

2021-ல் மத்திய அரசு, பெட்ரோலுக்கு ரூ 5, டீசலுக்கு ரூ 10 விலைக் குறைப்பு செய்தது. பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கு விக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும், ஏழை, எளிய மக்கள் நுகர்வினை மேம்படுத்தவும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்கள், மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளன. இதர மாநிலங்கள் குறைக்க வில்லை.
நவம்பர் 3-ம் நாள் நிலவரப்படி, வரிக்குறைப் பிற்குப் பிந்தைய, பெட்ரோல், டீசலின் சில்லரை விலை, மாநிலவாரிப் பட்டியல், இணைப்பு 1-ல் தரப்பட்டுள்ளது.
டிசம்பர் 2021 நிலவரப்படி, வாட் வரியைக் குறைத்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல், இணைப்பு 2-ல் தரப்பட் டுள்ளது.
அரசு அமைப்புச் சட்டம் பிரிவு 279ஏ இன் படி, பெட்ரோலியக் கச்சா எண்ணெய், உயர்தர டீசல், மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), இயற்கை எரி காற்று மற்றும் வான் ஊர்திகளுக்கான எரி பொருள்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை, எந்த நாள் முதல் நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ஜிஎஸ்டி மன்றம்தான், முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சட்டப் பிரிவு 9(2)-ன் படி, மேற்கண்ட பொருள்களை, ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு, ஜிஎஸ்டி மன்றத்தின் பரிந்துரை தேவை. ஆனால் இதுவரை, அத்தகைய பரிந்துரை எதுவும், ஜி.எஸ்.டி. மன்றத்திடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி விளக்கம் அளித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... தனியார் செல்போன் தொழிற்சாலையில் 8 பெண்கள் மாயமானதாக வதந்தி- மறியலில் ஈடுபட்ட 20 ஆயிரம் தொழிலாளர்கள்