
தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வருகிற மே மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் பணிகளுக்காக கடந்த நவம்பர் 21 மற்றும் 22-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
ஆனால், தொகுதிகளின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் பெயர் நீக்கப் பணிகளை முடித்திருக்க வேண்டும்.
இந்த முறைகேடுகளை விவரித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை. அதனால் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் முறையாக ஆய்வுகள் நடத்தி, இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நக்கீரன் ஆகியோர் முன்பு வந்த போது, ‘வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்து ஜனவரி 28ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படும். அந்த நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கிறது.
மனுதாரரின் கோரிக்கை மனு பரிசீலனை செய்து வரும் நிலையில், முன் கூட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.