
வேலூர்:
வேலூர் மாங்காய் மண்டி அருகே காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு நிறுவன நாள் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஏர்கலப்பை விவசாயிகள் சங்கம் மாநாடு நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.
தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், தேசிய செயலாளர் மெய்யப்பன், ஜெயக்குமார் எம்.பி, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம் குமார் ஆகியோர் பேசினார்.
இந்த மாநாடு ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் கிடையாது. 3 அல்லது 2 மாதத்தில் தேர்தல் வருகிறது. இதில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு தலையெழுத்தை மாற்ற நாம் பாடுபட வேண்டும்.
2019-ல் பா.ஜ.க., அ.தி.மு.க.வை எதிர்த்து நாம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்.
ராகுல்காந்தியை பிரதம வேட்பாளராக அறிவித்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிக அளவு வெற்றியை நாம் தற்போது அடைய வேண்டும். நமது நோக்கம் எடப்பாடியை வீழ்த்தி அவர் அடிமையாக வைத்திருக்கும் பா.ஜ.க.வையும் தோற்கடிக்க வேண்டும்.
புவியல் அமைப்புபடி தமிழத்தை போன்ற அமைப்பை கொண்ட தென்கொரியா பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளது. இது ஏன் தமிழகத்தால் முடியாது.
நம் ஆட்சியில் இல்லாததாலும், மன்மோகன் சிங் இல்லாததாலும் சீர்செய்யமுடியாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் கீழே விழுந்துள்ளது. இதை நாம் கூறவில்லை ரிசர்வ் பேங்க் ஆளுனரே கூறுகிறார்.
தனியார் துறையை வளர்ச்சி அடைய செய்து இந்தியாவில் ஒவ்வொரு பொதுத் துறையையும் அழித்து வருகிறார்கள் தேசத்தை சீர்குலைக்கிறார்கள்.
பா.ஜ.க மதவிசயத்தில் மட்டுமே மக்களை பிரிக்கவில்லை. பொருளாதார ரீதியிலும் மக்களை வீழ்த்த முயற்சி செய்கிறார்கள். இதனால் தான் மோடியை தோற்கடிக்க வேண்டும்.
வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து எவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளது. அதை எதிர்த்து கேட்காமல் ஆதரித்ததால் அவர்கள் சுயமரியாதையை இழந்துவிட்டார்கள்.
தி.மு.க. அண்மையில் தமிழக கவர்னரிடம் அ.தி.மு.க. மீதான உரிய ஆதாரத்துடன் ஒப்படைக்கப்பட்ட ஊழல் பட்டியல் மீது விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும்.
ஏர்கலப்பை ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை உணவு வழங்குவதையே செய்கிறது. அதனால் தான் காங்கிரஸ் ஏர்கலப்பையை கையில் எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. முருகனிடம் உள்ள அவரின் ஆயுதமானை வேலை கையில் எடுத்துள்ளது. பா.ஜ.க. முருகனிடம் மட்டும் இருக்க வேண்டிய ஆயுதமான வேலை எடுத்துவர காரணம் என்ன? அதன் பொருள் என்ன? யாரை மிரட்ட அதை எடுத்து வருகிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.