
சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக மெரினா கடற்கரை 8 மாதமாக மூடப்பட்டு இருந்தது. பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
அங்கு செயல்பட்ட அனைத்து கடை வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து மெரினாவில் ஏற்கனவே கடை வைத்து இருந்தவர்களும், புதிதாக கடை வைக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐகோர்ட்டு உத்தரவின்படி 900 கடைகள் மெரினாவில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றி மாநகராட்சி கடைகள் வைப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கி வருகிறது.
கடைகள் வைப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வரிசையில் நின்று படிவங்களை பெற்று செல்கின்றனர். இதுவரையில் 12 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட 12 ஆயிரம் விண்ணப்பங்களில் 10 ஆயிரம் பேர் புதிதாக கடை வைப்பதற்கு கொடுத்துள்ளனர். மீதமுள்ள 2,000 பேர் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்கள் ஆவர். ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் வந்திருந்தாலும் கூடுதலாக கடைகள் ஒதுக்குவதற்கு வாய்ப்பு இல்லை.
ஆக 900 பேருக்கு மட்டுமே கடை வைக்க மாநகராட்சி அனுமதி அளிக்கிறது. அவர்களுக்கு தள்ளு வண்டிகள் வழங்கப்படும். மார்ச் மாதத்தில் வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கப்படும். முதல் கட்டமாக 300 வண்டிகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெரினாவில் வைக்கப்படும் கடைகளில் புத்தகம், காலணிகள், துணிமணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் போன்றவை விற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிர்பானங்கள், பேன்சி பொருட்கள், உணவு பொருட்கள், நொறுக்குத் தீனிகள் போன்றவை மட்டுமே விற்க அனுமதிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க நாளை மறுநாள் (26-ந் தேதி) வரை கடைசிநாள். அதன் பின்னர் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து ஜனவரி முதல் வாரத்தில் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.