
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் 8 மாதமாக மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகின்றனர்.
தொற்று பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் பள்ளி திறப்பு பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தத்தில் உள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு பாடத்திட்டம் 35 சதவீதம் குறைக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். ஆனால் அது பற்றி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எந்த பாடங்களை படிப்பது, தவிர்ப்பது என்று தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். பொதுத்தேர்வு காலம் நெருங்கி வருவதால் பயமும் அதிகரித்துள்ளது.
பொங்கல் முடிந்து பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பும் இல்லை. பிப்ரவரி மாதம் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் பல்வேறு சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
கொரோனா தொற்று இன்னும் பல நாடுகள், மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பள்ளிகளை திறக்க அரசு தயக்கம் காட்டுகிறது.
பள்ளிகளை திறக்க வேண்டும் என்று 50 சதவீத பெற்றோர்கள் கூறினாலும் மீதம் உள்ளவர்கள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகிறது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கூட ஜூன், ஜூலை மாதத்தில் நடத்தவும் ஒரு திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பது குறித்து அரசு இதுவரையில் எவ்வித உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளை தீவிரப்படுத்த பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:-
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இதுவரை அறிவிக்காததால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பத்திலும் மன அழுத்தத்திலும் உள்ளனர். பாடம் குறைப்பு குறித்து அரசு விரைவாக தெளிவுபடுத்த வேண்டும்.
தேர்வு காலம் நெருங்கி வருவதால் பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் பய உணர்வில் உள்ளனர். தேர்வு நடைபெறும் காலத்தை அறிவித்தால் மாணவர்கள் மன உளைச்சல் இன்றி படிப்பார்கள்.
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிகுறியும் இல்லை. பள்ளிகள் திறப்பது மேலும் தள்ளிப்போகும் என்றே தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.