
சென்னை:
தி.மு.க. கழக பொருளாளர் நாடாளுமன்ற கழக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கொரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய-சீன உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று ஒருபுறம் நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ள எல்லையில் பிரச்சினை.
இன்னொரு பக்கம் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து விவசாயிகள் இரவு பகலாக தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டம் என்று மிக தலையாய பிரச்சினைகள் இன்றைக்கு அணிவகுத்து நிற்கின்றன.
இப்பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் பாராளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடரை நடத்த மத்திய பா.ஜ.க. அரசு விரும்பவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
விவசாயிகள் போராட்டம் தேசிய பிரச்சினையாக மாறலாம் என்று எச்சரித்துள்ள உச்சநீதிமன்றம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க. உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குளிர்காலக் கூட்டத்தை ரத்து செய்வது குறித்துக் கலந்து ஆலோசனை கூட நடத்தாமல் எதேச்சதிகாரமாக முடிவு எடுத்து பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்காது என்று அறிவிப்பது ஏற்றுக்கொள்ள இயலாத நடைமுறை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.