
புதுடெல்லி:
டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அதன் அருகே புதிய கட்டிடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ.971 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது.
2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை எழுப்புவதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
தரை தளம், தரைக்கு கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்களுடன் புதிய பாராளுமன்றம் கட்டப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் மக்களவை உறுப்பினர்கள் 888 பேர் இருக்கும் வகையில் இருக்கைகளும், மேல்சபை உறுப்பினர்கள் 384 பேர் இருக்கும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்படுகிறது.
இதேபோல பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும், நவீன வசதிகளும் புதிய பாராளுமன்றத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த கட்டிடம் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும் கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 12 கதவுகள் அமைக்கப்படுகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடம் நாட்டின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் அமைய உள்ளது.
ரூ.971 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பாராளுமன்றம் கட்டுவதில் விதிமீறல்கள் இருப்பதாகவும் அதனை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த 7-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது. விசாரணை முடியும் வரை புதிய கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டு மானங்களை இடிக்கவோ கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மரங்களை வெட்டக் கூடாது எனவும் அறிவுறுத்தப் பட்டது. அவை பின்பற்றப் படும் என்று மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அடிக்கல் நாட்டு விழா நடைமுறை செயல்பாடுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆனால் கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தது.
அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.