
கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 9 மாதமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. ஊட்டி மலை ரெயில் இயக்கமும் நிறுத்தப்பட்டது.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று நீலகிரியில் சினிமா தியேட்டர்கள் இயக்கவும், 7-ந்தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்கவும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
இதனிடையே உலக புகழ்பெற்ற மலை ரெயில் இயக்கம் குறித்து எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கோவை மாவட்டம், காரமடையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் சேவைக்கு விண்ணப்பித்தனர்.
அதன்பேரில் இன்றும் (5-ந்தேதி) நாளையும் (6-ந்தேதி) மற்றும் 12, 13-ந்தேதி ஆகிய 4 நாட்களுக்கு மலைரெயில் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது,
இதன்படி மலைரெயில் இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு கல்லாறு, ஹில்குரோவ், குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ரெயில் நிலையங்கள் வழியாக பகல் 12.30 மணிக்கு ஊட்டி சென்றடைகிறது. தொடர்ந்து பகல் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.
4 பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரெயிலில் 160 பேர் பயணம் செய்தனர். இந்த சிறப்பு ரெயிலை இயக்குவதற்காகத் தனியார் நிறுவனம் சார்பில் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது என்று சேலம் ரெயில்வே கோட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.