
தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன் (வயது 98).
முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார். அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த மாதம் 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
வயது முதிர்வு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை.

அன்பழகன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தி கண் கலங்கினார்.
அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதிகாலை 3 மணி அளவில் அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் இன்று காலையிலும் அன்பழன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மீண்டும் அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் ‘மல்க’ அங்கேயே அமர்ந்திருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் அங்கேயே இருந்தனர்.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், சேகர் பாபு, தா.மோ.அன்பரசன், சுந்தர், ஆவடி நாசர், ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், பல்லாவரம் இ.கருணாநிதி, பூங்கோதை ஆலடி அருணா, தாயகம் கவி, எஸ்.ஆர்.ராஜா, ரவிச்சந்திரன், மோகன், வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், தலைமை கழக நிர்வாகிகள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் ராமலிங்கம், ஐ.கென்னடி, வக்கீல் ரகு, படப்பை மனோகரன், பல்லாவரம் ஜோசப் அண்ணாதுரை, கூ.பி.ஜெயின், ஐ.சி.எப். முரளி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவரது வீட்டில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு நியூ ஆவடி ரோட்டில் உள்ள வேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
அன்பழகன் மறைவையொட்டி தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. தி.மு.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் 1 வாரத்துக்கு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.