
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும், எம்.பி.யுமான நாமல் ராஜபக்சே டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.
எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக பாரத பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.

எமது ஜனாதிபதி உள்பட அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயல்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில் நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு விட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.