
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் பஸ்களில் திருக்குறள் அச்சிடப்பட்டு உள்ளது.
1968-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த அண்ணாதுரை, அனைத்து அரசு பஸ்களிலும் திருக்குறள் அச்சிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து அரசு பஸ்களிலும் திருக்குறள் இடம் பெற்றன. திருக்குறளின் அருமையை பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தெரிந்து கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அரசு பஸ்களில் திருக்குறள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சில அரசு பஸ்களில் திருக்குறள் அகற்றப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் திருக்குறள் இடம் பெறவில்லை என்றும் சில பஸ்களில் திருக்குறள் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை அதிகாரிகள் தரப்பில் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “சென்னை கோயம்பேடு மற்றும் கே.கே.நகரில் இருந்து விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பஸ்களில் பராமரிப்பு பணி காரணமாக திருக்குறள் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் முத்துகிருஷ்ணன் கூறும்போது, அனைத்து பஸ்களிலும் திருக்குறள் இடம் பெற்றுள்ளது. இதுவரை திருக்குறள் அகற்றப்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை” என்றார்.