
நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் மாணவன் உதித்சூர்யா உள்பட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களின் தந்தையும் கைதாகி சிறையில் உள்ளனர்.
சென்னை கல்லூரியில் படித்து வந்த மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மட்டும் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
மாணவி அபிராமியின் சான்றிதழ் போட்டோவில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாணவியை அழைத்து விசாரணை நடத்தினர். தந்தையுடன் தேனிக்கு அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 4 மாணவர்களுடன் சேர்ந்து அவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
சான்றிதழில் உள்ள போட்டோவும், மாணவி அபிராமியின் இப்போதைய போட்டோவும் ஒன்று தானா? என்பதை கண்டு பிடிப்பதற்காக தடயவியல் சோதனைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் போட்டோவை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவு வந்த பின்னர்தான் மாணவி அபிராமியின் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாணவியின் புகைப்பட ஆய்வில் ஆள் மாறாட்டம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.