
சென்னை போயஸ்கார்டனில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வாழ்ந்த வீடான, வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிமன்றம், மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றவேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியது.
“ஜெயலலிதாவின் புகழை பரப்புவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் பாடுகின்றனர். கோடநாட்டில் ஜெயலலிதா தங்கியிருந்தார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா?” என கேட்ட நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.